சிறையில் உச்சபட்ச அதிகாரம் பயன்படுத்தப்பட்டது ஏன்? பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

பாதுகாப்பு செயலாளர் விளக்கம்... சமூகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவே சிறையில் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தால் கைதிகள் சிலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதால் சிறைச்சாலை அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட வேறு இடத்திற்கு மாற்றப்படவிருந்த 186 கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று சமூகத்தில் நடமாடுவார்களாயின் எந்தளவிற்கு அபாய நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை அனைவராலும் சிந்திக்க முடியும்.

எனவே சமூகத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பை தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் உயர்மட்டத்தில் அதிகாரங்களை உபயோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் வேறு சிறைச்சாலைகளிலிருந்து 200 அதிகாரிகளையும் விசேட அதிரடிப்படையினர் 200 பேரையும் மற்றும் பொலிஸார் 200 பேரையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறைச்சாலை நிலைவரத்தை அதிகாரிகள் மீண்டும் தம்வசப்படுத்திக் கொள்ள அவர்கள் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். அதற்கமைய செவ்வாய்கிழமை பகல் 1.30 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் சுமார் 10 நிமிடங்களில் நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தார்கள்.

இதன்போது கைதிகளிடம் காணப்பட்ட மருந்துகள், சமையறையில் உபயோகிக்கப்படும் கத்திகள் என்பவை அவர்களிடமிருந்து அகற்றப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.