சசிகலா நவம்பர் மாதம் விடுதலையாகிறாரா? சிறை நிர்வாகம் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் நவம்பர் மாதம் விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் உள்பட பலர் கூறிய நிலையில் தற்போது சசிகலா ரிலீஸ் குறித்த தகவலை பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறை நிர்வாகம் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் என பதிலளித்துள்ளது. எனவே சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் நவம்பர் மற்றும் டிசம்பரில் சசிகலா விடுதலையாவார் போன்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சசிகலாவுக்கு ரூபாய் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 கோடியை அவர் ஒருவேளை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது .

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனவரி மாதமே சசிகலா விடுதலையாகவுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது