மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கான பணிகள் இன்று தொடங்கியது

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கான பணிகள் இன்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நாளை மறுதினம் வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) 268 முதல் 633 தரவரிசையில் (நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 634 முதல் 951 தரவரிசையில் (நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.