உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போதுவரை, இந்த கொரோனா வைரஸு க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா, ரஷ்யா நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.