வழிபாட்டு தலங்களை திறக்காவிடில்... மாகாண அரசுகளுக்கு அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

வழிபாட்டு தலங்களை திறக்காவிடில் அதற்குரிய விலையை மாகாண அரசுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிபர் டிரம்ப். வரும் அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு தேவாலயங்கள் உட்பட மத வழிபாட்டு தலங்களை திறக்க இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும், வரும் நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலையொட்டி, ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு, மாகாண அரசுகளை, டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவாஞ்சலிகல் கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், மாகாண அரசுகள், தேவாலயங்களை திறக்க வேண்டும் என, டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பல மாகாணங்கள், பார்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறந்துள்ளன. தேவாலய வழிபாடும், அத்தியாவசியமானது தான். மக்கள் ஒற்றுமைக்கு தேவாலயங்கள் உதவுகின்றன. அதனால், தேவாலயங்கள், மசூதிகள், யூத வழிபாட்டு தலங்களை, மாகாண அரசுகள் உடனே திறக்க வேண்டும்.

தவறினால், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இதற்கிடையே, நோய் பரவல் தடுப்பு குழு, தேவாலயங்களை திறப்பது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. தேவாலயங்களில் குறைந்த அளவில் தான் மக்கள் கூட வேண்டும். முக கவசமுடன், நல்ல காற்றோட்டமான இடத்தில் பிரார்த்தனை நடத்த வேண்டும். குறைந்தபட்சம், ஒருவருக்கு ஒருவர், 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.