தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 45). இவருடைய மகன் ராகுல் (15) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு ஜாண்சன் தனது மோட்டார் சைக்கிளில் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காட்டாத்துறை அருகே சென்ற போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து ராகுல் சாலையிலும், ஜாண்சன் சாலையின் ஓரத்திலும் தூங்கி வீசப்பட்டனர்.
ஜாண்சனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது, களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த அரசு பஸ் ராகுல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து ராகுல் உயிருக்கு போராடினார்.
தன் கண் எதிரே மகன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதை கண்டு ஜாண்சன் அலறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.