கடனை திருப்பி கேட்ட மூதாட்டியின் விரலை துண்டித்த வாலிபர்; திருவாரூரில் பரபரப்பு

கொடுத்த கடனை திருப்பி கேட்ட மூதாட்டியின் விரலை வாலிபர் ஒருவர் துண்டித்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி(வயது 70). அதே ஊர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன்(32). இவரிடம், விசாலாட்சி ரூ.2 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். சம்பவத்தன்று தான் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கண்ணனிடம், விசாலாட்சி கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், விசாலாட்சியை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் விசாலாட்சியின் இடது கை விரல் துண்டானது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து துண்டான விரலை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டனர். பின்னர் துண்டான விரலையும், விசாலாட்சியையும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு விசாலாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.