ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்த வாலிபர் கடன் நெருக்கடியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தினேஷ் (வயது 28). இவர் செங்குன்றம் அண்ணா தெருவில் வசித்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா(22). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சரண்யா, 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

தினேஷ் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி பல இடங்களில் கடன் வாங்கி அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தார், ஒரு இடத்தை விற்று கடனை அடைத்தனர். ஆனால் அதன்பிறகும் தினேஷ் மீண்டும் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பலரிடம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தினேஷ், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.