- வீடு›
- அழகு குறிப்புகள்›
- பனிக்காலத்தில் ஏற்படும் சருமவறட்சியை போக்குவது எப்படி??
பனிக்காலத்தில் ஏற்படும் சருமவறட்சியை போக்குவது எப்படி??
By: Monisha Wed, 29 July 2020 2:42:28 PM
பனிக்காலத்தில் பொதுவாக சருமத்தில் வறட்சி ஏற்படும். இதற்கு பனிக் காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பதும் தான் முக்கிய காரணம். மேலும், பலர் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகள் பெரும்பாலும் உடலில் வறட்சித் தன்மையை உருவாக்கக்கூடியவை. இதற்கு மாற்றாக எண்ணெய் பசை தரும் ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் உடலின் ஈரத்தன்மை வறண்டு போகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல் தினமும் 2 வேளை ஈரப்பதம் தரும் கிரீமை உடலிலும் முகத்திலும் பூசிக்கொள்ளலாம்.
சிலர் உதடு வறண்டு போகாமல் இருக்க நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருப்பார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிவிடும். இதைத் தவிர்க்க உதட்டுக்குப் பூசும் லிப் பாமை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பூசினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது. லிப் பாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெண்ணெயை தடவலாம். குழந்தைகளுக்கும் தடவிவிடலாம்.
பனிக்காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும்போது, கையிலும் காலிலும் கோடுகள்போல் பிளவு உண்டாகி சிலருக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பிளவுப் பகுதியை அப்படியே விட்டால் அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க குளித்துவிட்டு வந்ததுமே சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் வறட்சி நீங்கும்.
பனிக் காலத்தில் அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் சிலருக்குக் கை, கால் பகுதிகள் நீல நிறத்தில் மாறிவிடும். ரத்த நாளங்கள் பனிக் காலத்தில் சுருங்குவதால் இந்தப் பிரச்சினை உண்டாகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவலாம். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கை, கால்களில் உறை அணிந்துகொள்ள வேண்டும். பனிக் காலத்தில் வெளியே செல்லும்போது, உடலை முழுவதுமாக மறைக்கும் அடர்த்தியான ஆடைகள் அணிய வேண்டும்.