- வீடு›
- அழகு குறிப்புகள்›
- கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
By: Karunakaran Thu, 10 Dec 2020 3:22:28 PM
கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும்.
ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.
தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும்.
ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.