- வீடு›
- பொழுதுபோக்கு›
- தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது; நடிகர் ராஜ்கிரண் கண்டனம்
தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது; நடிகர் ராஜ்கிரண் கண்டனம்
By: Monisha Thu, 22 Oct 2020 11:28:00 AM
விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தம்பி விஜய் சேதுபதி ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர். நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப் பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்போது அதில் இருந்து விலகி விட்டார்.
இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது, தமிழரின் பண்பும் அல்ல.
தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது. தமிழ் பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம்தான். அதற்காக தரம் தாழ்ந்து அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பது ஈனத்தனமானது.
தமிழ் உணர்வைவிட, மனிதநேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்." இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.