- வீடு›
- பொழுதுபோக்கு›
- மும்பை வருகிறேன்...முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்; நடிகை கங்கனா ரணாவத் சவால்
மும்பை வருகிறேன்...முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்; நடிகை கங்கனா ரணாவத் சவால்
By: Monisha Mon, 07 Sept 2020 11:01:56 AM
வருகிற 9-ந்தேதி மும்பை வருகிறேன்...முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் சவால் விடுத்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி வருகிறார். வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம்" என்று கூறியிருந்தார்.
மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், "மும்பை போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் டுவிட்டரில், "நான் மும்பை வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்" என்று சவால் விடுத்துள்ளார். கங்கனா தற்போது சொந்த ஊரான மணாலியில் தங்கி உள்ளார்.