- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி
By: Nagaraj Sun, 14 June 2020 7:33:32 PM
பிரபலமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் (34) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இந்த படம் இவரது திரைப்பட வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில் இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, 'காய் போ சே' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்துள்ள இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.
பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். இவரது மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.