- வீடு›
- பொழுதுபோக்கு›
- தொகுப்பாளரை திட்டி மிரட்டியதாக பிரபல மலையாள நடிகர் கைது
தொகுப்பாளரை திட்டி மிரட்டியதாக பிரபல மலையாள நடிகர் கைது
By: Nagaraj Mon, 26 Sept 2022 6:39:40 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், நாயகனாக நடித்துள்ள 'சட்டம்பி' படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் தொடர்பாக, பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார்.
அப்போது, ஒரு கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, பெண் பத்திரிகையாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், யூடியூப் சேனலில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அநாகரீகமாக பேசியதாக பெண் தொகுப்பாளர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நடைபெற்று வருவதாக மரடு போலீசார் தெரிவித்துள்ளனர். நேர்காணலின் போது பெண் தொகுப்பாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நான் தான் நிஜமாகவே பாதிக்கப்பட்டவன் என அவர் விளக்கம் அளித்துள்ளது கேரள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.