Advertisement

இளையராஜா இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்கிறார்!

By: Monisha Mon, 28 Dec 2020 09:41:21 AM

இளையராஜா இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்கிறார்!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக 'ரிக்கார்டிங் தியேட்டராக' பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார். அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

ilayaraja,prasad studio,recording theater,musical instrument,meditation ,இளையராஜா,பிரசாத் ஸ்டூடியோ,ரிக்கார்டிங் தியேட்டர்,இசைக்கருவி,தியானம்

அதைத் தொடர்ந்து நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்கவேண்டும். அவர் பயன்படுத்திய இடத்தில் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிப்பது என்று முடிவு செய்தனர். எனவே இன்று காலை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்கிறார். மதியம் வரை அங்கு தியானம் செய்ய உள்ளார். அதன்பின்னர் அவர் திருவண்ணாமலை புறப்பட்டுச் செல்வார் என்றும், இளையராஜாவின் இசைக்கருவிகளை அவருடைய உதவியாளர்கள் எடுத்துச் செல்வார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :