- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஒடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது குறித்து ராம் கோபால் வர்மா அதிரடி பேட்டி
ஒடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது குறித்து ராம் கோபால் வர்மா அதிரடி பேட்டி
By: Monisha Wed, 10 June 2020 2:47:21 PM
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தமிழ்த் திரையுலகில் தயாராக இருக்கும் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல் தெலுங்குத் திரையுலகில் ராம் கோபால் வர்மா இயக்கி, தயாரித்த 'க்ளைமேக்ஸ்' படத்தை அவருடைய இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தை 100 ரூபாய் கொடுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். 'க்ளைமேக்ஸ்' படம் வெளியான 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
இது தொடர்பாக ராம் கோபால் வர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- "ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் என்று அதற்காக விளம்பரம் செய்கின்றனர். இசை வெளியீட்டு விழா நடத்துகின்றனர். இதன் பிறகு விநியோகஸ்தருக்கான பணம், திரையரங்குக்கான பணம் என்று செலவு செய்கின்றனர். இவை அனைத்துக்குமான செலவு போகத்தான் தயாரிப்பாளருக்குப் படத்தில் வசூல் பணம் வருகிறது. அதை நேரடியாக மக்களிடமே எடுத்துச் சென்றால் கூடுதல் செலவுகள் குறையும், பணம் நேரடியாக தயாரிப்பாளருக்கே வரும். ரசிகர்கள் ஓடிடியில் படம் பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்போது அதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.
நான் எனது 'க்ளைமேக்ஸ்' திரைப்படத்தை எனது சொந்த இணையதளத்தில் வெளியிட்டேன். எனது படத்தை ஒரு நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணம் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். அடுத்து 'நேக்கட்' என்ற படத்துக்கான டிக்கெட் விலையை 200 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன். அதன் மதிப்பு 200 ரூபாயா, 100 ரூபாயா, 50 ரூபாயா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? பிடித்திருந்தால் மக்கள் வாங்குவார்கள், இல்லை வாங்க மாட்டார்கள், அவ்வளவுதானே.
இந்தியா முழுவதும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கும் திரைப்படம் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்'. ராஜமௌலி அவர் படத்துக்கு 1000 ரூபாய் அல்லது 2000 ரூபாய் என அவர் விருப்பத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை வைத்தால், ஒரு குடும்பம் சேர்ந்து அந்த 1000 ரூபாய்க்குப் பார்ப்பார்கள் அல்லது 5-6 நண்பர்கள் சேர்ந்து பார்ப்பார்கள். அவர்கள் மொபைலில் பார்க்கிறார்களா, ஹோம் தியேட்டரில் பார்க்கிறார்களா என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.
இப்படிச் செய்தால் ராஜமௌலியின் அடுத்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்கள் அனைவரும் முதல் சில மணி நேரங்களில் பார்த்து விடுவார்கள். ஒரு வாரம் டிக்கெட் கிடைக்கவில்லை, பெரிய வரிசை இருக்கிறது என்றெல்லாம் பிரச்சினைகள் வராது. படத்தைக் குறைந்தது 1 கோடி பேர் பார்த்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அவருக்கோ, தயாரிப்பாளருக்கோ நேரடியாக 1000 கோடி ரூபாய் வசூல் போய்ச் சேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.