- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாரதிராஜாவின் கண்டனத்திற்கு இரண்டாம் குத்து பட இயக்குநர் பதிலடி
பாரதிராஜாவின் கண்டனத்திற்கு இரண்டாம் குத்து பட இயக்குநர் பதிலடி
By: Monisha Fri, 09 Oct 2020 12:20:45 PM
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் 2-ம் பாகமாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் குத்து'. இத்திரைப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
இந்நிலையில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் "உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல.
பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
சினிமா வியாபாரமும்தான்... ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?
சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.
கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??”என்று பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், "அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். 1981-ம் ஆண்டு 'டிக் டிக் டிக்' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?" என்று கூறி டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.