- வீடு›
- பொழுதுபோக்கு›
- சென்னை அணி தோல்வியடைந்தாலும் தோனிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்; நடிகை வரலட்சுமி
சென்னை அணி தோல்வியடைந்தாலும் தோனிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்; நடிகை வரலட்சுமி
By: Monisha Sat, 03 Oct 2020 11:25:18 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் இறுதி வரை போராடிய தோனி துபாயின் அதிக வெப்பநிலை மற்றும் சோர்வு காரணமாக ரன்கள் அடிக்க முடியாமல் திணறினார். அவரது வயதுக்கு 20 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு 7வது ஓவரிலேயே களமிறங்கி 20வது ஓவர் வரை பேட்டிங் செய்வது என்பது பெரிய விஷயம்தான். அவருடன் கடைசி ஓவர்களில் விளையாடிய சாம் கர்ரன் துருதுருவென இருந்தாலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு குறைவாக கிடைத்தது சென்னை அணியின் துரதிஷ்டமாக இருந்தது.
நேற்றைய போட்டியில் தோனி எடுத்த சில முடிவுகள் சர்ச்சைக்குரியவையாக கருதப்படுகிறது. கேதார் ஜாதவ்வுக்கு முன்பாகவே சாம் கர்ரனை இறக்கியிருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் கடைசியில் இறங்கிய சாம் கர்ரன் அதிக பந்துகள் சந்திக்கும் வகையில் தோனி அவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு தோனியின் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் தோனியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். இன்னும் அதிக போட்டி உள்ளதால் அடுத்தடுத்த போட்டிகளில் செய்த தவறுகளை திருத்தி வெற்றி பெற்று கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அணி தோல்வியடைந்தாலும் நாங்கள் தோனிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "நாங்கள் எப்போதும் உங்கள் மீது அன்பு செலுத்துவோம். உடல்நலக் குறைவாக இருந்த போதிலும் நீங்கள் அணியின் வெற்றிக்காக போராடினீர்கள். இருப்பினும் இன்னும் போட்டி முடியவில்லை. நாம் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு செல்வோம். தைரியமாக இருங்கள். என்று கூறியுள்ளார். வரலட்சுமியின் இந்த டுவீட்டுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.