Advertisement

குழந்தைகளுக்கான தினசரி உணவு பழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:27:48 AM

குழந்தைகளுக்கான தினசரி உணவு பழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: நாம் இன்று உண்ணும் உணவின் விளைவுகள் பல ஆண்டுகள் கழித்துதான் தெரியும் என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே குழந்தைகளுக்கு எந்த உணவு முறையை பழக்க வேண்டும் என்பதை பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.


உடல் ஆரோக்கியம் என்பது ஒரே இரவில் கிடைக்கும் ஒரு விஷயம் அல்ல. நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக நாம் சிறு வயது முதல் நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். சிறு குழந்தைகளாக இருப்பதால், அவர்கள் எந்த உணவையும் சாப்பிடலாம் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது. அதனால் வறுத்த பொரித்த உணவுகளாகிய சமோசா,வடை, சிப்ஸ் போன்ற உணவுகளை தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

இனிப்புகள், ஜூஸ் ,ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் அதிகமாக கொடுக்கின்றனர். அவர்கள் வாலிபர்களாக ஆகும்வரை உணவு பழக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. இந்த பழக்கம் தான் குறிப்பிட்ட வயதிற்கு மேல், உடல் பருமன் , நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு காரணமாய் இருக்கின்றன.

இப்படிப்பட்ட நோய்கள் நம்மை ஆட்கொண்டவுடன், நமது உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதால் முழுவதுமாக 100% நன்மை கிடைக்காது. ஆகையால் சிறு வயதில் இருந்தே உணவில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால், பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக மெனக்கெட தேவையில்லை .

பெரியவர்கள், அவர்கள் வேலைகளை காரணம் காட்டி, காலை உணவை புறக்கணிக்கின்றனர். ஆனால் குழந்தைகள் அவ்வாறு நடக்க நாம் பயிற்றுவிக்க கூடாது. இது அவர்கள் வளரும் பருவம். ஆகையால், எந்த வேலை உணவையும் தடங்கலின்றி உண்ணும்போது தான் வளர்ச்சி சீராக இருக்கும். அதிலும், காலை உணவை தவிர்ர்ப்பது பல உடல் கேடுகளை விளைவிக்கும். காலை உணவு அருந்தாத குழந்தைகளுக்கு உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை.

அதுவே, காலை உணவை சரியாக எடுத்து கொள்ளும் குழந்தைகளுக்கு போலேட், கால்சியம், இரும்புசத்து ,ஐயோடின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்க படுகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

vegetables,prospects,children,study,diet ,காய்கறிகள், வாய்ப்புகள், குழந்தைகள், ஆய்வு, உணவுமுறை

அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும்: ஸ்நாக்ஸ் நேரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நேரம். ஓடியாடி விளையாடிவிட்டு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, எண்ணையில் பொரித்த உணவுகளும், பிஸ்சாக்களும் ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது. பெற்றோர் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியை கொடுக்க திட்டமிட வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள பொருட்கள் , உடலில் ரீலின் என்ற புரதத்தின் அளவை குறைக்கின்றன.

இந்த புரதம் , மூளை சரியாக இயங்க உதவுகிறது. இந்த ரீலின் புரதத்தின் அளவு குறைவதால், குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாறுபாடு தோன்றுகிறது. இது அல்சைமர் நோய்க்கு வழி வகுக்கிறது. நாளடைவில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு வரவும் வாய்ப்பிருக்கிறது.

சாக்லேட், ஐஸ் க்ரீம் , பபுள் கம் , லாலி பாப் போன்றவை எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். இதில் பயன்படுத்தப்படும் சர்க்கரை தான் பின்னாட்களில் வரும் பல வியாதிகளுக்கு காரணம். முற்காலத்தை விட, இன்றைய குழந்தைகளின் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு மூன்று மடங்கு அதிகரித்து காணப்படுகிறது என்று சமீபத்தில் நம் நாட்டில் நடந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. முற்றிலும் சர்க்கரையை ஒதுக்க தேவையில்லை. ஆனால் அதன் அளவை குறைத்து உண்பது உடலுக்கு நலத்தை கொடுக்கும்.


குழந்தைகளுக்கு பிடிக்காத உணவின் பட்டியலில் நிச்சயமாக கீரையும் இருக்கும். ஆனால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றி குழந்தைகளுக்கு எப்படி தெரியும்? ஆகவே இதனை அவர்கள் உண்ணும் வழியில் கொடுப்பதுதான் சிறந்த செயல். பெற்றோர், குழந்தைகள் விரும்பும் விதத்தில் கீரையை கொடுக்க பழக வேண்டும். சாலட், சாண்ட்விச், டிக்கா என்று ஏதேனும் ஒரு வடிவத்தில் கீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சிறு குழந்தையிலேயே நாம் பல காய்கறிகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது பெரியவர்களாகும் போது அவர்கள் எல்லா வகை உணவையும் உண்ணுவர். அதுவே அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சில காய்கறிகளை அறிமுகம் செய்யும்போது அவர்கள் மறுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அன்று ஆய்வுகள் கூறுகின்றன.

Tags :
|