அப்போ பிலிப்பைன்ஸ்... இப்போ இலங்கை; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
By: Nagaraj Wed, 13 July 2022 4:33:51 PM
நியூயார்க்: 1986ல் பிலிப்பைன்சில் நடந்தது போல் தற்போது இலங்கையில் நடந்துள்ளது என்று புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து, இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலகினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் புகுந்து அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்பட பதிவில், அன்று 1986 பிலிப்பைன்ஸ். இன்று இலங்கை 2022. ஜனாதிபதி மாளிகைகளில் இருந்து ஜனாதிபதிகளை மக்கள் துரத்துவது கிடையாது. ஆனால், துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் அநீதி செய்தால், மக்கள் ஜனாதிபதிகளை வெளியேற்றுகிறார்கள். எந்த ஒரு வரலாற்றுத் திருத்தமும் அதை மாற்றாது என்று பதியப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.