கடலூர் மாவட்டத்தில் கனமழையால் மக்கள் பெரும் அவதி
By: Nagaraj Sun, 13 Nov 2022 2:55:22 PM
கடலூர்: வெளுத்தெடுக்கும் கனமழை... வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 10ம் தேதி இரவு முதல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. மாலையில் சிறிது நேரம் ஓய்ந்த பிறகு இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. பேய் மழை போல் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில் நேற்று மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.