உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 23 லட்சம் பேர் குணம்
By: Karunakaran Fri, 07 Aug 2020 10:59:18 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 1 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருபிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புடைய 61 லட்சத்து 75 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 7 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 1 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 395 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.