உலகம் முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து 1.50 கோடி பேர் குணம்
By: Karunakaran Wed, 19 Aug 2020 4:09:27 PM
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடந்த 8 மாதங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முழு ஊரடங்கு, தனிமனித இடைவெளி ஆகியவையே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக உள்ளன.
இருப்பினும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனாவிலிருந்து பலர் குணமடைந்து வருகின்றனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.22 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.82 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா , ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.