- வீடு›
- செய்திகள்›
- விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் - பினராயி விஜயன்
விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் - பினராயி விஜயன்
By: Karunakaran Sat, 08 Aug 2020 5:01:22 PM
கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிரிந்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், காயம் அடைந்தவர்களின் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும். விமான விபத்தில் உயிரிழந்த நபர்கள் உள்பட பயணித்த அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.