இந்தியாவில் நேற்று மட்டும் 10.5 லட்சம் சாம்பிள்கள் கொரோனா பரிசோதனை
By: Karunakaran Sun, 30 Aug 2020 1:49:31 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளதாகவும், நேற்று வரை 4,14,61,636 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,55,027 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.63 லட்சம் என்ற அளவில் இருந்தது. இதில் கொரோனா வைரசால் 62,550 பேர் உயிரிழந்திருந்தனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,48,999 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.81 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவீதமாக இருந்தது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.