கொரோனா பயத்தால் 100 சதவீதத்தினர் மன ஆரோக்கியத்தால் பாதிப்பு
By: Karunakaran Mon, 24 Aug 2020 09:18:21 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. பெரிய பெரிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள் என கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருவது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனையை இதுவரை செய்து கொள்ளாதவர்கள் கூட, ஒவ்வொரு நாளும் கொரோனா பயத்துடன் தான் இருக்கின்றனர்.
நம்மை சுற்றிலும் பலர் கொரோனா பாதிப்பு ஆளாகி, அவதியுற்று வருவதை காண்கையில், நல்ல வேளை, நாம் இன்னும் தப்பி வருகிறோம் என சுய திருப்தி அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்மில் ஒரு சிறிய சதவீதத்தினருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், கொரோனா பயம் நம் அனைவரையும் தாக்கி வருகிறது.
நம்மில் 100 சதவீதத்தினருக்கு கொரோனா காரணமாக மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிம்ஹான்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மிகுந்த கவலைக்குள்ளாகி இருப்பதாக சொல்கிறது. இவர்கள் ஆரோக்கியமானவர்கள். இருப்பினும், கொரோனா வந்து விடுமோ என்ற பயம் இவர்களை பாதிப்புக்கு ஆளாக்கி விடுகிறதாக தெரிவித்துள்ளது.
இந்த மாதிரியான சூழலில் மனம் விட்டு பேச வைப்பதும், மனித தொடர்பை நிறுவுவதும், சரியான நேரத்தில் உதவுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நபருக்கு சரியான புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்தும். பயத்தில் இருக்கிற நபர்கள் அதில் இருந்து வெளியே வரவும், இயல்பு வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உடன் இருப்பவர்கள் வழிநடத்த வேண்டும். இது அவர்களது மன ஆரோக்கியம் மட்டுமில்லாமல் உயிரையே காக்கும்.