100 சதவீத ரயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்- பாலகிருஷ்ணன்
By: Monisha Sat, 12 Dec 2020 3:07:10 PM
நாகை மாவட்டத்தின் கொள்ளிடம், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் அழுகும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது;-
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் குறிப்பாக ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. தமிழக அரசு எவ்வளவு நிவாரணம் அறிவிக்க போகிறது என்பதை இன்னும் சொல்லவில்லை. வீடு இடிந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப் போவதாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது. வீடு இழந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்.
எல்லா வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார புதிய ஆலோசனைகளை உருவாக்கி அதிக மழையின் போது தண்ணீர் வடிய நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். சராசரியாக கணக்கு பார்க்காமல் முழு நஷ்டத்தையும் வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே வழங்கி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
எல்லா பழைய தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகளை கட்டி் தரவேண்டும். ஊரடங்கு தளர்வுகள் என்று அறிவித்து சென்னை புறநகர் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்ய பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பேருந்துகளில் 100 சதவீத பயணம் செய்யும் போது வராத இந்த கொரோனா ரயில் பயணத்தில் மட்டும் எப்படி வரும்? சாதாரண ஏழை எளிய மக்கள் தான் ரயில் பயணத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் சகஜ நிலைக்கு ஆளாகி 100 சதவீத ரயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என அவா் கூறினார்.