10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்
By: vaithegi Fri, 18 Aug 2023 10:37:59 AM
தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 18.8.2023 காலை 10 மணி முதல் வழங்கப்படவுள்ளது.
எனவே, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோன்று, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இதனை அடுத்து அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.