அறிவிப்பு வருவதற்கு முன் தேர்வு பயம் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
By: Monisha Wed, 10 June 2020 12:20:00 PM
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் 25 வரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று காலை அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பால் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு 10ஆம் வகுப்பு தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதய தர்ஷினி 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். தேர்வு வரும் 15ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று உதயதர்ஷினி, பள்ளிக்குச் சென்று ஹால் டிக்கெட் வாங்கி வந்தார். அதன்பின் அவர் தேர்வு பயத்தால் யாருடனும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து என ஒரு நாளுக்கு முன்பு அறிவிப்பு வந்திருந்தால் இந்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.