தமிழகத்தில் இயல்பை விட 11 சதவீதம் வரை கூடுதல் மழை; வானிலை மையம் அறிவிப்பு
By: Nagaraj Thu, 09 July 2020 2:32:42 PM
கூடுதல் மழை பெய்துள்ளது... தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. சென்னையின் சில பகுதிகளில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, 9; ஊத்துக்கோட்டை, கடையநல்லுார், 8; பண்ருட்டி, தியாகதுருகம், 7; பள்ளிப்பட்டு, 6; திருவாலங்காடு, அரிமளம், காவேரிப்பாக்கம், வளவனுார், 5; காஞ்சிபுரம், திருச்செங்கோடு, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு,
கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று
வீசும். இந்த பகுதிகளுக்கு, நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, ஜூன், 1 முதல் ஜூலை, 7 வரையிலான
காலகட்டத்தில், தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் அதிக மழை
பெய்துஉள்ளது.
புதுச்சேரியில், 30 சதவீதம் மழை குறைந்துள்ளது.
திருநெல்வேலி, 60; சென்னை, 49; கடலுார், 38; நாமக்கல், திருவள்ளூர், 25;
துாத்துக்குடி மாவட்டங்களில், 36 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கரூர்,
247; பெரம்பலுார், 118; ராமநாதபுரம், 204; சிவகங்கை, 48; திருச்சி, 76;
புதுக்கோட்டை, 104;, திண்டுக்கல் மாவட்டங்களில், 78 சதவீதம் அதிக மழை
பெய்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.