டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,195 பேர் பாதிப்பு
By: Karunakaran Fri, 31 July 2020 6:50:23 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், ஜூலை மாதம் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக டெல்லி மாநில அரசு அச்சம் தெரிவித்தது.
விரைவாக நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்காக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொண்டதால் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து 1,206 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா காரணமாக மொத்தம் 1,35,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,20,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா காரணமாக 27 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 3963 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் 5,629 RT-PCR/CBNAAT/TrueNat பரிசோதனைகளும், 13,462 ரேபிட் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி உள்ளது.