மெக்சிகோவில் 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
By: Karunakaran Wed, 07 Oct 2020 09:38:03 AM
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் நின்று கொண்டிருந்தன. தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிணங்கள் கிடந்த ஒரு வேனில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுச்சீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தொழில் போட்டியில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.