பீகாரில் இடி, மின்னல் காரணமாக 12 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Thu, 09 July 2020 10:08:37 AM
தற்போது இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பீகார், அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அமராவதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். மீட்பு குழுவினர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் சேர்த்து வருகின்றனர். தற்போது பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீகாரில் இடி, மின்னல் தாக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பீகாரில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.