தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1,291 டன் உரம் வந்தது
By: Nagaraj Wed, 20 Sept 2023 4:40:06 PM
தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் தஞ்சை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படும்.
இதற்கு தேவையான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்குப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது சம்பா, தாளடி அறுவடை முடிந்து கோடை நெல் சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் 1,291 டன் உரம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில் 785.250 டன் யூரியா, 379.850 டன் டிஏபி, 127.700 டன் காம்ப்ளக்ஸ் உரம் ஆகும்.
தஞ்சையில் இருந்து உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரமூட்டைகள் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.