நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் பறிமுதல்
By: Karunakaran Thu, 11 June 2020 09:55:46 AM
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக தொழிலதிபர் நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றிருந்தார். ஆனால் கடனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பி சென்றார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் உள்ள நிரவ் மோடிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.
நிரவ் மோடிக்கு சொந்தமானவற்றை பறிமுதல் செய்ய ஏற்கனவே அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. அதற்கு அனுமதியும் கிடைத்துவிட்டது. தற்போது நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரது நிறுவனங்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு இவை கொண்டுவரப்பட்டன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி, இப்பொருட்கள் முறைப்படி பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,350 கோடி ஆகும்.