நிவர் புயல் காரணமாக புதுவையில் 144 தடை உத்தரவு அமல்
By: Monisha Tue, 24 Nov 2020 3:38:55 PM
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னா், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருமாறியது. இது இன்று காலை வலுவடைந்து நிவர் புயலாக மாறியது.
மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்க உள்ளது.
இந்த நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100கி.மீ. முதல் 110கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.