இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 1.54 லட்சம் பேர் குணம்
By: Karunakaran Sat, 13 June 2020 12:40:44 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்தியாவிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் மொத்தம் 308993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மட்டும் 386 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 154330 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் கொரோனாவுக்கு 145779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 101141 பேருக்கும், தமிழகத்தில் 40698 பேருக்கும், டெல்லியில் 36824 பேருக்கும், குஜராத்தில் 22527 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.