தாய்லாந்தில் ரெயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலி
By: Karunakaran Sun, 11 Oct 2020 3:08:12 PM
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிழக்கே 50 கி.மீ. தொலைவில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புத்த திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். இந்த பேருந்து, இன்று காலை 8 மணியளவில் கிலாங் கவீங் கிலன் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங்கில் ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 29 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மாகாண கவர்னர் மைத்ரீ திரிதிலானந்து செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து, அதன் மேற்கூரை தூக்கி எறியப்பட்டது. மேலும், பலரது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தன. அவர்களது உடைமைகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். பின்னர், கிரேன் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர கூடும் என கூறப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற கொடூர விபத்துகள் நடப்பது வழக்கமாக உள்ளது. மோசமான சாலைகள், விரைவு பயணம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் வலுவற்ற சட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தும் அந்நாட்டில் விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.