சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்
By: Karunakaran Thu, 02 July 2020 09:50:41 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அழிக்க சிறப்பு காவல் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மாவோயிஸ்டுகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர்.
இந்நிலையில் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 18 மாவோயிஸ்டுகள் மாவட்ட கலெக்டர் தீபக் சோனி, போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவ் ஆகியோர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். மேலும், இனி திருந்தி வாழ்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் டிஐஜி கூறுகையில், சரண் அடைந்த மாவோயிஸ்டுகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவி செய்வோம் எனவும், டெய்லர், கொத்தனார் மற்றும் டிரைவர் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம் எனவும், டிரைவிங் கற்றுக்கொண்டதும் டிரைவிங் லைசென்சும் பெற்றுக் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.