சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 192 ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு
By: Nagaraj Sat, 13 June 2020 09:04:03 AM
வெளிமாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வருகை... சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, வெளிமாவட்டங்களிலிருந்து, 192 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சேர்த்து, 80 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், சுழற்சி முறையில், 240 ஓட்டுனர்கள், 120 அவசர சிகிச்சை உதவியாளர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பரவல் அதிகரித்து வருவதால், ஆம்புலன்ஸ்களின் சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக, 112 ஆம்புலன்ஸ்கள் வர வைக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மட்டும், 192 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும், ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு ஓட்டுனர் உள்ளனர்.
அவரச நேரங்களில் பயன்படும் மருத்துவ உபகரணங்கள், வாகனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவையை பொறுத்து, இந்த ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.