கொரோனா பாதிப்பு உயர்வு ... நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 நாள் ஒத்திகை
By: vaithegi Sun, 26 Mar 2023 12:29:53 PM
இந்தியா: நாடு முழுவதும் கடந்த ஓராண்டாகவே கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்து கொண்டு வந்தது. ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு உயர்வதன் காரணமாக, சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற 6 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் மற்றொரு வைரஸ் காய்ச்சலான இன்புளூவன்சா பரவலும் பெருகி கொண்டே வருகிறது.
இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் விதமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி படுத்த வருகிற 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக வெளியிட்டுள்ளன.