கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய 2 நிபுணர்கள் சீனா புறப்பட்டனர்!
By: Monisha Sat, 11 July 2020 12:22:49 PM
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே கலங்கடித்து வரும் நிலையில் வைரஸ் உருவானது பற்றிய சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரம், அரசியலாகி உள்ளது.
இதில் சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் சேர்ந்து கொண்டு இந்த தொற்று பரவலை தவறாக கையாண்டது, சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சுமத்தி, அந்த அமைப்புடனான உறவை துண்டித்து விட்டது.
இதனையடுத்து, 120-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒருமித்த குரலில் கடந்த மே மாதம் உலக சுகாதார சபையில் கோரிக்கை வைத்தனர். உலக சுகாதார நிறுவனம் இந்த விசாரணையை வழிநடத்த வேண்டும் என்று சீனா கூறியது.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் 2 பேர் சீனா சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர், விலங்கு சுகாதார நிபுணர். மற்றொருவர், தொற்றுநோயியல் நிபுணர். இவர்கள் 2 பேரும் அடுத்த 2 நாட்கள் சீன தலைநகர் பீஜிங்கில் தங்கி இருந்து கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான ஒரு பெரிய பணிக்கான அடித்தளத்தை அமைப்பார்கள்.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், "விலங்குகளிடம் இருந்து வைரஸ் எப்படி மனிதர்களுக்கு தாவியது என்பதை கற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்ட எதிர் கால பணிக்கான நோக்கம் மற்றும் குறிப்பு விதிமுறைகளை இவர்கள் 2 பேரும் உருவாக்குவார்கள்" என கூறப்பிட்டுள்ளது.