- வீடு›
- செய்திகள்›
- ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு
ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு
By: Karunakaran Thu, 19 Nov 2020 12:03:59 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் இருவரும் டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் அருண் மஜூம்தார் ஆகியோர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோ பைடனால் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை மந்திரியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் 2009-ல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டவருமான மஜூம்தார், எரிசக்தி துறை மந்திரியாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் டாக்டர் விவேக் மூர்த்தி, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராக விளங்கியுள்ளார். அதேபோல் மஜூம்தார் ஜோ பைடனுக்கு எரிசக்தி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார். இதனால் இவர்கள் இருவருக்கும் இந்த பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.