தென் சீன கடல் பகுதியில் 2 அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு
By: Nagaraj Sun, 05 July 2020 11:40:30 AM
இந்திய எல்லையில் சீன ராணுவம் மோதல் போக்கை பின்பற்றி வரும் நிலையில் தென் சீன கடல் பகுதியில் இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அதிரடியாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா பக்கத்து நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. சமீபத்தில் லடாக் எல்லைப் பகுதியில், நம் வீரர்களை, சீன வீரர்கள் தாக்கினர். இதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதேபோல், தென் சீன கடல் பகுதியில், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுடனும், சீனா, மோதல் போக்கை பின்பற்றி வருகிறது.
தென் சீன கடல் பகுதியில் சீன கடற்படையினர் அத்துமீறுவதும், மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள்
தென் சீன கடல் பகுதிக்கு அதிரடியாக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு இந்த
விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து போர் பயிற்சியில்
ஈடுபட்டு வருகின்றன.
இதே பகுதியில், சீன கடற்படையினரும் அவ்வப்போது
போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க படையினரின் இந்த
பயிற்சி சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க
ராணுவ அதிகாரி சீன் பிரோபி கூறியதாவது:
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள
எங்கள் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, தென் சீன கடல் பகுதியில் எங்கள்
போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தென் சீன கடல் பகுதிக்கு, சீனா
மட்டும் உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. சர்வதேச சட்டம் எங்கெல்லாம்
அனுமதிக்கிறதோ, அங்கெல்லாம் அனைத்து நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கும்,
கப்பல்கள் செல்வதற்கும் உரிமை உண்டு.
இந்த உரிமையை உறுதி செய்யும்
பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள
நாடுகள், எந்தவித அச்சுறுத்தலும் இன்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.