கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020 இஐசிஎம்ஏ விழா ரத்து
By: Monisha Sun, 28 June 2020 12:11:59 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.98 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு மிக முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது 2020 இஐசிஎம்ஏ விழாவும் இணைந்துள்ளது.
முந்தைய திட்டங்களின் படி 2020 இஐசிஎம்ஏ விழா நவம்பர் 3 ஆம் தேதி துவங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த விழா இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருந்தது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருவதால் இவ்விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன விழாவாக இஐசிஎம்ஏ இருக்கிறது. தற்சமயம் இவ்விழாவின் 2020 பதிப்பு ரத்து செய்யப்பட்டு, இவ்விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.