மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 22 முறை நிலநடுக்கம்
By: Karunakaran Fri, 24 July 2020 12:25:59 PM
மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள சாம்பாய், சைதுவல், ஷியாகா மற்றும் செர்ச்ஹிப் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 18-ந்தேதி முதல் இதுவரை 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.2 முதல் 5.5 என்ற ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சாம்பாய் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மட்டும் இதுவரை 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 17 கிராமங்களில் அதிக பாதிப்படைந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக தேவாலயம், சமுதாயக்கூடம் மற்றும் 170 வீடுகள் சேதம் அடைந்தன.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீதிகளில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். வீடுகளை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு அரசு உணவு, தண்ணீர் வழங்கி வருகிறது. மக்கள் பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய புவியியல் ஆய்வு மையத்தினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிக முறை நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்பாகவும், மிசோரம் பகுதியில் நிலங்களை ஆய்வு செய்யவும் சிறந்த நிபுணர்களை அனுப்பி வைக்க மத்திய அரசை முதல்-மந்திரி சோரம்தங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.