ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் 22 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
By: Karunakaran Mon, 08 June 2020 3:59:54 PM
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிஞ்சோரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் இன்று பேட்டி அளித்தபோது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் நடந்த 9 வெவ்வேறு அதிரடி நடவடிக்கைகளில், 6 முக்கிய தளபதிகள் உள்பட 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 3 பேர் முக்கிய தளபதிகள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் 88 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கூட்டாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.