விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Thu, 22 Oct 2020 09:13:23 AM
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,135 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 481 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 16 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 3 ஆயிரத்து 153 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,135 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் கிராமப்பகுதிகளிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.