இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவிற்கு 250 மில்லியன் டாலர் நிதி உதவி
By: Karunakaran Sun, 20 Sept 2020 7:19:44 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் மாலத்தீவு கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலீ இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக நடந்த உரையாடலின் போது மாலத்தீவு அதிபர் பேசினார்.
அதன்பின், இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவு அரசிற்கு 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா மாலத்தீவு வெளியியுறவுத் துரை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், நிதி மந்திரி இப்ராஹிம் அமீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் பாரத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கையில், இந்த நிதியுதவியானது மாலத்தீவு அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை கருவூலப் பத்திர விற்பனை மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.