ஒரு மாதத்தில் 256 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது - ரயில்வே நிர்வாகம்
By: Monisha Wed, 03 June 2020 5:53:26 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்புவதற்கு வசதியாக அவர்களுக்கென கடந்த மே-1ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சில மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலம் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களுக்கான டிக்கெட் தொகையை யார் செலுத்துவது என்பதில் கடும் குழப்பம் நிலவியது.
சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 4,040 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட போதிலும் 256 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட வேண்டிய 105 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்பின் குஜராத்தில் இருந்து 47 ரெயில்களும், கர்நாடகாவில் இருந்து 38 ரெயில்களும், உத்தர பிரதேசத்தில் இருந்து 30 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மே 1-ந்தேதியில் இருந்து இன்று வரை 4,197 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 81 ரெயில்கள் மாற்று ரெயில்கள். 4,116 ரெயில்கள் சேரவேண்டிய இடத்தை அடைந்துள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.